Sultan The Warrior-News Update



இந்தியத் திரையுலகில் சுல்தான் நிச்சயம் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்தப் படம் நிச்சயம் அப்பாவின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும். இன்னொன்று இது என் கனவுப் படமும் கூட. தரத்திலும் வசூலிலும் உலக அளவில் பேசப்படும், என்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

சுல்தான் படம் மற்றும் அதன் இப்போதைய நிலை குறித்து படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

சுல்தான் படம் என்னுடைய பல வருட கனவு, உழைப்பின் விளைவு என்றுகூடச் சொல்லலாம். இந்தப் படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும் என கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் நான் திட்டமிட்டேன்.

இல்லாவிட்டால் அப்பாவை அத்தனை சீக்கிரம் யாராலும் கன்வின்ஸ் பண்ணவே முடியாது. தன் மகள் என்பதற்காகவெல்லாம் எந்த வாய்ப்பையும் தந்துவிட மாட்டார் அவர்.

ஆனால் அப்பா ஒரு முறை முடிவு செயதுவிட்டால், கடவுளே நினைத்தாலும் அதை மாற்றமுடியாது. அதுதான் அவரது இயல்பு. ஆரம்பத்திலேயே இந்தப் படம் குறித்த ஒவ்வொரு காட்சிக்கும் அவருக்கு போதிய விளக்கம் கூறி அவருக்கு திருப்தி வரும் வகையில் கதையை அமைத்தேன்.

மற்றபடி எந்தக் காட்சியிலும் அப்பா ஒரு திருத்தம்கூடச் சொன்னதில்லை.

இந்தப் படத்தில் நாயகி விஜயலட்சுமி என்றபோது அப்பா ஒரு நிமிடம் சங்கடப்பட்டார். பின்னர் அதற்கான காட்சி அமைப்புகளைச் சொன்னேன். மக்கள் என்ன பேசுவார்கள் என்பதை அவர்களுக்கு முன்னதாகவே கணித்துச் சொல்லிவிடுவார் அப்பா. எத்தனையோ படங்களுக்கு அப்படித்தான் நடந்திருக்கிறது.

எந்த மகளுக்கும் கிடைக்காத பெருமையை ஒரு அப்பாவாக எனக்குத் தந்திருக்கிறார். அந்தப் பெருமையைக் காப்பாற்றும் விதத்தில் இந்தப் படத்தை எடுத்திருப்பதாகவே நம்புகிறேன்.

இந்தப் படம் அப்பாவின் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு இனிய அதிர்ச்சியாக இருக்கும். இதன் மூன்றாவது டிரெயிலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

குழந்தைகள் மற்றும் மாணவர்களின் குதூகல மாதமான ஏப்ரலில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்.
எந்திரனுக்கு முன், உலகம் முழுக்க வெளியாகப்போகும் படம் சுல்தான்தான். 2000க்கும் கூடுதலான பிரிண்டுகள். அனிமேஷன் தவிர்த்து அப்பா ரியலாக வரும் சில காட்சிகளையும் ஸ்பெஷலாக வைக்கும் உத்தேசமுள்ளது, என்றார்.

சூப்பர் ஸ்டார் மகள்னா சும்மாவா... 32 அடி பாயும் புலிக்குட்டியல்லவா!

0 comments: